தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்தி அருகே நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது இரு மகன்கள் காயமடைந்துள்ளனர்.
தம்புள்ளை நோக்கிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பாதசாரியாக இருந்த பெண் மற்றும் அவரது இரு குழந்தைகள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்திக்கடனை நிறைவேற்றச் செல்ல தேவையான பொருட்களை வாங்குவதற்காக தம்புள்ளை நகருக்கு வந்திருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த 19 மற்றும் 14 வயதுடைய இரு மகன்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த பெண் குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி, எட்டு நாட்களுக்கு முன்பே இலங்கை திரும்பியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக டிப்பர் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
