எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று இலங்கையின் சர்வதேச நாணய நிதியம் (IMF) திட்டத்தின் பெறுபேறுகள் மற்றும் தற்போதைய ஒப்பந்தத்திற்குப் பின்னரான நாட்டின் பொருளாதார மூலோபாயம் குறித்து அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை, விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை அங்கீகரித்து, இலங்கைக்கு மேலும் சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிப்பை அனுமதித்ததைத் தொடர்ந்து அவர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட ரவி கருணாநாயக்க, 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட IMF-EFF திட்டம் இன்னும் ஏழு மாதங்களில் நிறைவடைய உள்ளதாக சுட்டிக்காட்டி, அந்தத் திட்டத்தின் பொருளாதார, சமூக மற்றும் நிதி சார்ந்த விளைவுகளை அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதா என வினவினார்.
அத்திட்டத்தின் இலக்குகள் எட்டப்பட்டுள்ளனவா, அவை என்னென்ன, அவற்றில் எவ்வளவு அளவு வெற்றி பெறப்பட்டுள்ளது என்பதற்கான விபரங்களையும் அவர் கோரினார்.
மேலும், அதிகரிக்கப்பட்ட வரிகள், எரிபொருள் மற்றும் மின்கட்டண உயர்வுகள், வாழ்வாதாரச் செலவு அதிகரிப்பு போன்றவற்றின் மூலம் பொதுமக்கள் ஏற்றுக்கொண்ட சுமைகள், அவர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார நலனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதையும் அரசாங்கம் விளக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
IMF ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் தொடக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், வெளிநாட்டு முதலீட்டு வரவு மற்றும் ஏற்றுமதி விரிவாக்கம் போன்றவை நடைமுறையில் எட்டப்பட்டுள்ளனவா என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் அவர் கேள்வி எழுப்பினார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், சுயதொழில் செய்பவர்கள், ஊதியதாரர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகக் குழுக்கள்மீது IMF சீர்திருத்தங்கள் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாக அரசாங்கம் ஆய்வு மேற்கொண்டுள்ளதா என்பதையும், அத்தகைய மதிப்பீடுகளின் முடிவுகளையும் வெளியிடுமாறு அவர் கோரினார்.
புதிய IMF திட்டமொன்றில் இணையாமல் இலங்கை தனது பொருளாதார மீட்சியைத் தொடரும் அளவுக்கு பொருளாதார நிலைத்தன்மையும் கடன் தாங்கும் திறனும் பெற்றுவிட்டதா என அரசாங்கம் கருதுகிறதா என்றும் அவர் வினவினார்.
மேலும், புதிய IMF திட்டம் பரிசீலனையில் இல்லையெனில், வாழ்வாதாரச் செலவை குறைப்பது, பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவது, வளர்ச்சியைத் தொடர்வது, கடன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவது மற்றும் மக்களின் நலனை பாதுகாப்பது ஆகியவற்றுக்கான மாற்று மூலோபாயத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய IMF திட்ட காலப்பகுதியில் முழுமையாக அடையப்படவில்லை என அவர் கருதும் இலக்குகளை எதிர்காலத்தில் எவ்வாறு அடைய முடியும் என்பதையும் அரசாங்கம் விளக்க வேண்டும் எனக் கேட்டார்.
அதேவேளை, இலங்கையின் IMF திட்டத்திற்கான மொத்த செலவினம், அதில் அடங்கும் முதல்தொகை மற்றும் வட்டி செலுத்துதல்கள் குறித்த விவரங்களையும், 2028 முதல் 2048 வரை ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன் சேவைப் பொறுப்புகள், முதல்தொகை மற்றும் வட்டி கட்டணங்கள், அதற்குத் தேவையான அமெரிக்க டொலர் தொகைகள் உள்ளிட்ட முழுமையான தகவல்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
