எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் நிலவினாலும், நாட்டின் எந்தப் பகுதியிலும் தற்போதைக்கு குடிநீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார, எதிர்கால நிலைமைகளைப் பொறுத்து அவசியம் ஏற்பட்டால் மட்டுமே நீர் விநியோகக் கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
குடிநீருக்கான பிரதான நீர்த்தேக்கங்கள் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இதுவரை அவை எந்தவித நீர் விநியோகக் கட்டுப்பாடுகளையும் அறிவிக்காததால், வழமைபோல் முழு உற்பத்தித் திறனுடன் குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்கால வறட்சி நிலையை எதிர்கொள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் குழாய் கிணறுகளை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வறட்சி நிலை தொடர்வதால், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
