முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவுக்கு எதிரான விளக்கமளிக்க முடியாத சொத்துகள் தொடர்பான வழக்கில், ரூ.600 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகள் தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசின் தினமின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), 2010 மார்ச் 31 முதல் 2012 மார்ச் 31 வரை தொழிலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில், சட்டபூர்வ வருமானத்தால் விளக்க முடியாத சொத்துகளை மெர்வின் சில்வா குவித்ததாக குற்றஞ்சாட்டி வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம் பல வங்கிகளின் முகாமையாளர்கள் சாட்சியமளிக்கவுள்ளனர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களில், நிலையான வைப்புத்தொகைகள், வங்கிக் கணக்குகள், உயர்மதிப்புள்ள காணிகள், ஆடம்பர வாகனங்கள், காப்புறுதி முதலீடுகள் உள்ளிட்ட பல சொத்துகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் சுமார் ரூ.485 மில்லியன் பெறுமதியுடைய விளக்கமளிக்க முடியாத சொத்துகள் சேர்க்கப்பட்டதாக நிரூபிக்க அரசுத் தரப்பு முயற்சித்து வருகிறது.
