தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இன்றி மாகாண சபைகள் தொடர்ந்து இயங்குவது ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நிர்வாக ரீதியில் மாகாண சபைகள் இயங்கலாம் என சிலர் கூறினாலும், மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் பிரதிநிதித்துவ அமைப்பை நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் எனக் குறிப்பிட்டார்.
மாகாண சபைகள் உறுப்பினர்கள் இன்றி இயங்க அனுமதிக்கப்பட்டால், அதே நிலை நாடாளுமன்றத்திற்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதிலாகச் செயல்பட முடியாது என்றும், அவர்கள் மக்களுக்கு நேரடியாகப் பொறுப்புக்கூறுபவர்கள் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி உலக ஜனநாயக தினத்தில் இது தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்த அவர், அதற்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான முறை மற்றும் திகதி குறித்து அரசாங்கம் அறிவிக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
