நோர்ட்டன் பிரிட்ஜ் மற்றும் மஸ்கெலியா பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நோர்ட்டன் பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியின் கிரிவான்எலியா பகுதியில் இன்று (04) ஒரு வீடு, ஒரு கடை மற்றும் சாலையோரமுள்ள பல இடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இதேவேளை, பெரிய கற் பாறைகள் சரிவு மற்றும் நிலச்சரிவுகளால் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதான சாலையில் விழுந்துள்ள நிலச்சரிவுகளையும் பாறைகளையும் அகற்றுவதற்கு நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு அபாயம் காரணமாக நோர்ட்டன் பிரிட்ஜ் – சமுர்த்தி அபிவிருத்தி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இடைத்தாங்கள் முகாமில் 15 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பொது மக்களை, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆரச்சி, ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஞ்சுள சுரவீர ஆரச்சி, அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
