ஓமான் கடற்கரையையொட்டிய ஹோர்முஸ் நீரிணையில் சென்ற சரக்கு கப்பல் மீது மர்ம ஆயுதம் தாக்கியதாக பிரிட்டனின் கடல்சார் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில், ஓமனின் அல் கசாப் நகருக்கு வடகிழக்கே சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில் சென்ற சரக்கு கப்பல், ‘அடையாளம் தெரியாத ஆயுதத்தால்’ தாக்கப்பட்டுள்ளது. கப்பல் சேதமடைந்ததாக பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் Ambrey தெரிவித்துள்ளது. எனினும், கப்பலின் பெயர், அது எந்த நாட்டின் கொடியுடன் இயங்கியது அல்லது என்ன சரக்குகளை ஏற்றிச் சென்றது என்பது குறித்து எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், ஈரானுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வேண்டுகோளை ஏற்று கடந்த வாரம் ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் முடிவை கைவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, ஓமனுடன் மட்டும் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கடல் போக்குவரத்துக்கான புதிய வழித்தடம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையின்றி வணிகக் கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து ஈரானை வலியுறுத்தி வருகிறது. ஆனால், தனது கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் நடைபெறும் கப்பல் போக்குவரத்து ஈரானின் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை டெஹ்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிராந்தியத்தில் மீண்டும் அதிகரித்துள்ள பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணையின் எதிர்கால கப்பல் போக்குவரத்து குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது இதுவரை உறுதியாகத் தெரியாத நிலையில், வளைகுடா பகுதியில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த கவலை மேலும் அதிகரித்துள்ளது.
