முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன உள்ளிட்ட 06 அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (05) திறந்த நீதிமன்றத்தில் அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையையும், தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான விசாரணைகளையும் பாதிக்கும் வகையில், இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குறித்த கருத்துகளை வெளியிட்டவர்களில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, சுகீஷ்வர பண்டார, அசங்க நவரத்ன மற்றும் மகிந்த பதிரண ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இவ்வாறான கருத்துகள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கக்கூடும் எனவும், 2026ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திகதி முதல் ஒளிபரப்பான சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் செம்மைப்படுத்தப்படாத காணொளிகளை ஊடக நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
