முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 515 தென்னை விவசாயிகளுக்கு 22.7 மில்லியன் ரூபாய் மானியமும், 3,000 தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தின் ‘வடக்கு தென்னை முக்கோண’ (Northern Coconut Triangle) திட்டத்தின் கீழ், தென்னை பயிர்ச்செய்கை சபையினால் முன்னெடுக்கப்படும் ‘கப்துரு சவிய’ மாற்றுத் திட்டத்தின் கீழ் நேற்று (08) முல்லியாவளையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் 443 விவசாயிகளுக்கு தென்னைக் காணிகளில் நீர்ப்பாசன கட்டமைப்புகளை அமைப்பதற்கான மானியக் காசோலைகளும், மேலும் 72 விவசாயிகளுக்கு தென்னைக் காணிகளை மறுசீரமைப்பதற்கான விசேட மானியங்களும் வழங்கப்பட்டன.
வடக்கு மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சுமார் 3,000 தென்னங்கன்றுகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்தத் திட்டம், கைவிடப்பட்ட காணிகளை மீண்டும் பயிர்ச்செய்கைக்கு கொண்டு வருதல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் தென்னைத் தொழில்துறையின் ஏற்றுமதி பங்களிப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வருடாந்த தென்னை உற்பத்தியை 4.2 பில்லியன் தேங்காய்களாகவும், தென்னை சார்ந்த ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கும் தேசிய இலக்கின் ஒரு பகுதியாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
