சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சிலாபம் முதல் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடற்பகுதிகளில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50 முதல் 60 கிலோமீற்றருக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும்.
இதனால் குறித்த கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு முதல் காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் உயரத்திற்கு எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
