கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் திராவிட முகப்புத்திர சிற்பத் தேர் உற்சவம் இன்று (11) செவ்வாய்க்கிழமை காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
விசேட கிரியை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜைகளைத் தொடர்ந்து, மாமாங்கேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதன்போது பக்தர்களின் ‘அரோகரா’ கோஷத்துடன் தேர் உற்சவம் கோலாகலமாக இடம்பெற்றது.
மஹோற்சவம் கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், இன்று விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பஞ்சமுக விநாயகருக்கான வசந்த மண்டப வழிபாடுகள் இடம்பெற்றதுடன், சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.
பின்னர் வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் தேரில் ஆரோகணித்ததைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீ ராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையையும், பிதுர்க்கடன் தீர்க்கும் புனித தீர்த்தக் கேணியையும் கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது.
இந்நிலையில், ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நாளை (12) நண்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளது.
