கடந்த 12 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, பெக்கோ சமனின் தாயாரின் இறுதிக்கிரிகைகளில், நேரில் சென்று அஞ்சலி செலுத்த பெக்கோ சமன் மருத்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், அவர் இறுதி அஞ்சலி செலுத்துவதை நிராகரித்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
பெக்கோ சமனின் தாயார் 12ஆம் திகதி மித்தெனிய பகுதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
‘கரந்தெனிய சுத்தா’ என்பவரால் இக்கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், ‘கணேமுல்ல சஞ்சீவ’ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான பின்னணியில், வெலிசர அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘பெக்கோ சமனிடம்’ அவரது தாயாரின் படுகொலை தொடர்பான தகவலைச் சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதன்போதே, அவர் தனது தாயாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் செல்வதை மறுத்துள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் நலன் விசாரிப்பதற்காக அவரைப் பார்க்கச் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டாம் என தாயாரை ‘சுத்தா’ அச்சுறுத்தியிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து மகனைப் பார்க்கச் சிறைச்சாலைக்குச் சென்று வந்துள்ளார்.
இதுவே தாயாரின் படுகொலைக்கு மற்றொரு முக்கிய காரணியாக அமைந்திருக்கலாம் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
