திவுலப்பிட்டி தனியார் பஸ் சாரதி ஒருவரை வாளால் தாக்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட மூவரை எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திவுலப்பிட்டிய நகரில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸுக்கு பின்னால் வந்த கார் ஒன்று, திடீரென பஸ்ஸை மறித்து, அந்த காரிலிருந்து இறங்கிய பெண்ணொருவரும் இரு ஆண்களும் கையில் வாளுடன் பஸ் சாரதியை நோக்கிச் சென்று அவரைத் தாக்க முயன்றுள்ளனர்.
பஸ்ஸிலிருந்த பயணி ஒருவர் இச்சம்பவத்தை முழுமையாகத் தனது கைப்பேசியில் காணொளியாகப் பதிவு செய்ததுடன், அக்காணொளி சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பகிரப்பட்டது.
அந்த காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த திவுலப்பிட்டிய பொலிஸார், பஸ்ஸில் பயணித்த சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (14) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
