வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கால்நடை மருத்துவர்கள் ‘விதிமுறைக்கேற்ப வேலை செய்யும்’ (work-to-rule) தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் முப்படை கால்நடை மருத்துவ சேவையை அழைப்பதற்கு சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, வழமையான கடமை நேரங்களுக்குப் பின்னரும், வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்களிலும் அவசர சிகிச்சை தேவைப்படும் வனவிலங்குகளுக்கு சிகிச்சையளிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த அவசர நிலையைக் கருத்திற்கொண்டு, சூழல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி, பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி ஆகியோரின் வழிகாட்டலிலும், அமைச்சின் செயலாளரின் இணக்கப்பாட்டுடனும் பாதுகாப்பு அமைச்சிடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கமைய, வடமேல் வனஜீவராசிகள் வலயத்திற்குட்பட்ட ஹேரத்கம வனப் பாதுகாப்புப் பிரிவுக்குரிய திப்பட்டுவெவ கிராமத்தில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட, சுமார் 5 அடி உயரமுடைய யானைக் குட்டிக்கு உடனடியாக சிகிச்சையளிப்பதற்காக இலங்கை விமானப்படை கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தற்போது அவ்விடத்திற்குச் சென்றுள்ளனர்.
நிகவெரட்டிய வனஜீவராசிகள் சுகாதார முகாமைத்துவப் பிரிவுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக சிகிச்சை தாமதமானதால் யானைக் குட்டியின் உடல்நிலை மேலும் மோசமடையும் அபாயம் காணப்பட்டது. இதனையடுத்து, ஹேரத்கம வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருந்த அந்த யானைக் குட்டிக்கான அனைத்து அவசியமான மருத்துவ சிகிச்சைகளையும், பாதுகாப்பு அமைச்சரின் நேரடி வழிகாட்டலின் கீழ் வருகை தந்த இராணுவக் கால்நடை மருத்துவக் குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.
இத்தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் காலப்பகுதியில், வழமையான கடமை நேரங்களுக்குப் பின்னரான நேரங்கள், வார இறுதி நாட்கள் மற்றும் அனைத்து அரச விடுமுறை நாட்களிலும் நாடளாவிய ரீதியில் அவசர சிகிச்சை மற்றும் பராமரிப்பு தேவைப்படும் வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சின் கீழ் பணியாற்றும் முப்படை கால்நடை மருத்துவர்களின் முழுமையான சேவையைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
