மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்த மனைவி அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சடலம் நேற்று திங்கட்கிழமை (4) மன்னார் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் சடலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை துண்டு துண்டுகளாக வெட்டி உரப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ள நிலையில், மன்னார் காவல்நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப்படுத்தியதோடு கொலையை செய்த பெண்ணையும் அழைத்து வந்தனர்.
பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர் என்றும் கொலை செய்த அவரது மனைவி மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் தெரிய வருகிறது.
குறித்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்ச நிலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
