ரூ.2 கோடிக்கும் அதிக பெறுமதியில் அம்பியூலன்ஸ்கள் – மாரவில, நிக்கவரெட்டிய மற்றும் தம்பதெனிய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
ஜப்பான் – இலங்கை சர்வதேச நட்புறவு ஒத்துழைப்பு அமைப்பினால் வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு ரூ. 2 கோடிக்கும் அதிக பெறுமதியான 3 அம்பியூலன்ஸ்கள் நேற்று (31) காலை வழங்கப்பட்டன.
இந்த அம்புலன்ஸ்களை வழங்கும் நிகழ்வு வடமேல் மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள வளாகத்தில், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
வடமேல் மாகாணத்தில் சுமார் 150 சுகாதார நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தற்போது அவசர நோயாளர் சேவைகளுக்காக 95 அம்பியூலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் சேவைகளுக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில் இந்த 3 அம்புலன்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட அம்பியூலன்ஸ்கள் மாரவில, நிக்கவரெட்டிய மற்றும் தம்பதெனிய வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன.
நிகழ்வின் நிறைவில் பங்கேற்றவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் குணவர்தன, சுகாதாரத் துறை அதிகாரிகள், வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், ஜப்பான் – இலங்கை சர்வதேச நட்புறவு அமைப்பின் பிரதிநிதிகள் கைட்சோ மிட்டாஷா, யமகிவா மற்றும் அமைப்பின் தலைவர் சம்பத் ஜயசேகர உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
