இலங்கையில் மின்சார ரயில் பாதை கட்டமைப்பின் பணிகள் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்துக்குள் ஆரம்பமாகும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்நும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் அரசின் திட்டத்துக்கு அமைவாக இந்த மின்சார ரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை 2030 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, இன்று (04) பொலன்னறுவையில் நடைபெற்ற கனவு இலக்கு மக்கள் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட பொலன்னறுவை புகையிரத நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த முதற்கட்ட திட்டத்தின் கீழ், அதிக பயணிகள் புழக்கம் கொண்ட மூன்று முக்கிய போக்குவரத்து வழித்தடங்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நவீனமயமாக்கப்படவுள்ளன.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து ராகம வரையிலான பிரதான வழித்தடம், கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையிலான கடலோர வழித்தடம் மற்றும் மருதானையிலிருந்து மாகும்புர வரையிலான களனிவெளி வழித்தடம் ஆகிய மூன்று பிரதான பாதைகள் இத்திட்டத்தில் உள்ளடங்குகின்றன.
இத்திட்டத்தின் மூலம் நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் தரம் உயர்த்தப்படவுள்ளன. மேலும், இந்த திட்டத்தின்கிழமை தற்போதுள்ள ரயில் நிலையங்கள் புனரமைக்கப்படுவதுடன், புதிய ரயில் நிலையங்களும் நவீன முறையில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
அவ்வாறு புதிதாகக் கட்டப்படும் ரயில் நிலையங்கள் வெறும் பயணச்சீட்டுகளை மட்டும் வழங்கிவிட்டுச் செல்லும் சாதாரண பாரம்பரிய மையங்களாக இருக்காது என்றும், பயணிகளுக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகள் மற்றும் கூடுதல் சேவைகளை உள்ளடக்கிய அதிநவீன மையங்களாகத் திகழும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
