இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் போது பந்தய நிறுவனங்களுடன் தொடர்புடைய மறைமுக விளம்பரங்கள் (Surrogate Brands) தொடர்ந்து காட்சிப்படுத்தப்படுவது குறித்து சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி சஞ்சன ஹத்துடுவ கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் சிறப்பம்சங்களை பகுப்பாய்வு செய்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட ஐந்து நாள் போட்டிச் சுருக்க காணொளிகளில் ஒரு குறிப்பிட்ட வர்த்தக நாமம் சுமார் 14 நிமிடங்கள் திரையில் தோன்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காணொளிகள் 629,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன.
காலி டெஸ்ட் போட்டியையும் சேர்த்து, சுமார் 20 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்ற 10 காணொளிகளில் குறித்த வர்த்தக நாமம் சுமார் 25 நிமிடங்கள் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
SCC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விக்கெட்டுக்கு பின்புறம் உள்ள விளம்பர விரிப்பு, எல்லைக் கோடு விளம்பரங்கள் மற்றும் சைட்-ஸ்கிரீன் ஆகியவற்றில் இந்த விளம்பரங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்போட்டிகளில் விளம்பரப்படுத்தப்பட்ட 3 வர்த்தக நாமங்களும் வெளிநாட்டு பந்தய நிறுவனங்களுடன் தொடர்புடைய மறைமுக விளம்பர நாமங்கள் என அவர் விபரித்துள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பல சூதாட்ட இணையதளங்களுக்கான அணுகலைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், இத்தகைய விளம்பரங்கள் எவ்வாறு தொடர்ந்து இடம்பெறுகின்றன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிரிக்கெட் மைதானத்தில் வரையப்பட்டிருந்த விளம்பரம், இணையவழி சூதாட்ட நிறுவனமொன்றின் மறைமுக வர்த்தக நாமமாக செயல்படுவதாக வாதிடும் ஹத்துடுவ, 2025 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சூதாட்ட ஒழுங்குமுறை ஆணைக்குழுச் சட்டத்தில் உரிமமில்லாத இணையவழி சூதாட்டங்களை இயக்குவது மற்றும் விளம்பரப்படுத்துவது தொடர்பான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதை நினைவூட்டியுள்ளார்.
இருப்பினும், இலங்கை எல்லைக்குள் நடைபெறும் போட்டிகளில் பந்தய விளம்பரங்களை தங்களது நிறுவனம் அனுமதிப்பதில்லை என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது.
ஒருபுறம் அதிகாரம் பெற்ற அமைப்புகள் சூதாட்ட இணையதளங்களைத் தடை செய்யும் அதே வேளையில், மறுபுறம் கிரிக்கெட் நேரலைகள் மற்றும் சிறப்பம்சங்கள் மூலம் பந்தய நிறுவனங்களுடன் தொடர்புடைய மறைமுக வர்த்தக நாமங்கள் அதிகளவில் விளம்பரப்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது இலங்கையின் சட்ட அமுலாக்கத்தில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
