தெற்கு கடற்பரப்பில் தொழில் நிமித்தம் பலநாட்களாக மீன்பிடி படகில் காயங்களோடு தங்கியிருந்த மீனவர் ஒருவரை, இலங்கை கடற்படையினர் துரிதமாகச் செயற்பட்டு மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கடந்த 03ஆம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 07 மீனவர்களுடன் குறித்த பலநாள் மீன்பிடி படகு கடலுக்குச் சென்றிருந்தது. தெற்குக் கடற்பரப்பிலிருந்து சுமார் 81 கடல் மைல் தொலைவில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, படகிலிருந்த மீனவர் ஒருவர் திடீரென காயமடைந்துள்ளார்.
கொழும்பிலுள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, மீட்புப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அதன்படி, அந்தப் பகுதிக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த ‘MT MAUI’ என்ற வர்த்தகக் கப்பலின் உதவியுடன் காயமடைந்த மீனவர் மீட்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தென்னிலங்கை கடற்படை கட்டளைப் பிரிவிற்குச் சொந்தமான விசைப்படகு ஒன்று குறித்த பகுதிக்கு விரைந்து சென்று, வர்த்தகக் கப்பலிலிருந்து மீனவரைப் பொறுப்பேற்றது.
கடற்படை வீரர்களால் மீனவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், அவர் உடனடியாக காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடல்சார் சமூகத்தினருக்கு ஏற்படும் இவ்வாறான அவசர காலங்களில் உதவுவதற்காக, கொழும்பு MRCC மையத்துடன் இணைந்து கடற்படை எப்போதும் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
