கொழும்பு, பொரளை சிறுவர் வைத்தியசாலையில் இயங்கிவந்த ஒரே ஒரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரமும் செயலிலந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனைகள் முழுமையாக முடங்கியுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியளாலர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிகரம தெரிவித்துள்ளார்.
அவர் இவ்விடயம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (22) மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று குறித்த எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் செயலிலந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக வைத்தியசாலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகளும் முழுமையாக முடங்கியுள்ளன.
அவ்வைத்தியசாலையில் தினமும் 10 முதல் 12 சிறுவர்களுக்கு எம்ஆர்ஐ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்பரிசோதனைக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ள நோயாளர்களில் பெயர் பட்டியல் 10 மாதங்களாக நீண்டுள்ளது.
அத்தோடு இப்பரிசோதனையின் போது மயக்கமருந்து வழங்குவது அவசியம். அத்தகைய வசதி கொண்ட ஒரேயொரு சிறப்புச் சிறுவர் வைத்தியசாலை இதுவாகும். தனியார் துறையில் இப்பரிசோதனைக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேல் செலவாக கூடும்.
குறித்த இயந்திரத்தை பழுதுபார்ப்பதுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள போதிலும், தேசிய மருந்து ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் எழுத்துப்பூர்வ அனுமதி கிடைக்காமையினால், அவை ஒரு வாரத்திக்கும் மேல் சுங்கப் பிரிவில் தேங்கிக்கிடப்பதாகத் தெரியவந்துள்ளது.
