அமெரிக்க ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அவற்றின் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகள் குறித்த சுவாரசியமான தகவல்களை சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றின் மிக வயதான ஜனாதிபதியான ஜோ பைடன், தனது 81 ஆவது வயதில் மருத்துவ பரிசோதனைக்குப் பின், “நான் மிகவும் இளமையாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல், நடப்பு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 80 ஆவது வயதை நெருங்கும் நிலையிலும், “தான் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக” அவரது மருத்துவர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி என்பவர் உலகின் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவர் என்பதால், அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது என்பது வெறும் மருத்துவம் சார்ந்தது மட்டுமல்ல, அது தங்களின் அரசியல் பலத்தைக் காட்டும் ஒரு உத்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது என அரசியல் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், கடந்த காலத்தில் ஜனாதிபதிகளின் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் மறைக்கப்பட்ட வரலாறும் அமெரிக்காவுக்கு உண்டு.
1919 இல் உட்ரோ வில்சன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதும், பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்ததும் ஆரம்பத்தில் வெள்ளை மாளிகையினால் மறைக்கப்பட்டன.
1960 களின் பின்னரே இந்த மருத்துவ அறிக்கைகள் பொதுமக்களுக்கு வெளியிடும் வழக்கம் உருவானது.
எவ்வாறாயினும், ஜனாதிபதிகள் தங்களுக்குச் சாதகமான உடல்நலத் தகவல்களை மட்டுமே வெளியிடுவதாகவும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எதிரி நாடுகளின் உளவு அமைப்புகளுக்குத் தகவல் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் பல முக்கிய விபரங்கள் மூடி மறைக்கப்படுவதாகவும் மருத்துவ வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டுவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
