ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே காவலில் வைக்கப்பட்டுள்ள விதம் குறித்து அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்வைத்த கவலைக்குரிய விடயங்கள் தீவிரமாக கவனிக்கப்பட வேண்டியவை என இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுரேஷ் சாலே நீதவான் உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்படாமல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
PTA-க்கு எதிராக பல ஆண்டுகளாகப் பிரசாரம் செய்த பல செயற்பாட்டாளர்கள் தற்போது இந்த விடயத்தில் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாக இருப்பதாகவும், அவர்களின் இந்த மௌனம் கொள்கை மற்றும் நிலைப்பாட்டின் தொடர்ச்சித்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் இருப்பதாகக் கூறிய அவர், அந்த நீதி பாரபட்சமின்றி, அரசியல் தலையீடுகளின்றி மற்றும் தெரிவுசெய்யப்பட்ட முறையில் சட்டம் பயன்படுத்தப்படாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உண்மையை அடிப்படையாகக் கொள்ளாமல் அரசியல் நோக்கங்களுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் செய்யப்படும் துரோகமாக மாறக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதே ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தாக்குதலுக்கு முன்னதாக ஏற்பட்ட அலட்சியங்களுக்கு தனிப்பட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்களைத் தெளிவாக அடையாளம் காட்டியிருந்ததாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சிலரே தற்போது விசாரணைகளுக்கு தலைமை வகிப்பது முரண்பாடான நிலையாக இருப்பதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியாக தாங்கள் விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல எனத் தெரிவித்த அவர், பொறுப்புக்கூறல் அவசியமானதாயினும், அரசியல் உந்துதலுடன் நடத்தப்படும் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதியை ஒருபோதும் வழங்காது எனவும் தெரிவித்துள்ளார்.
