ஹொரண, அரம்பகந்த பகுதியில் தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் படுகாயமடைந்த கணவன் உயிரிழந்துள்ளார்.
ஹொரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரம்பகந்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ( 7) அதிகாலை நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
வீட்டின் உள்ளே கணவன் மற்றும் மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது ஆத்திரமடைந்த மனைவி, கூரிய ஆயுதத்தால் கணவனைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அரம்பகந்த, ஹொரண பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான நீதவான் பரிசோதனைகள் நேற்றைய தினம் இடம்பெற்றதை அடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்பவ இடத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மனைவியைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ள ஹொரண பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
