சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம், கப்புவத்தை மற்றும் கந்தானை புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) செவ்வாய்க்கிழமை காலை குறித்த புகையிரத கடவையை முச்சக்கர வண்டி கடக்க முயன்ற போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தையடுத்து, புத்தளம் மார்க்கத்திலான புகையிரத சேவைகளில் தற்காலிகமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் பணிகளும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளும் கந்தானை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
