பிரதான நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலி நகர அபிவிருத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
உலக மரபுரிமை நகரமான காலி நகரத்தை கலாசார மற்றும் சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராய்ந்த ஜனாதிபதி, அதனை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடினார்.
இந்த திட்டத்தின் கீழ், காலி நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம், தபாலகம், சிறைச்சாலை மற்றும் தாதியர் பயிற்சிப் பாடசாலை ஆகியவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்குத் தேவையான காணிகளை விடுவிப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

முறையான நகரத் திட்டத்தின் கீழ் காலி நகரை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நகரத்தைத் திட்டமிடுவதிலும், காலி கோட்டைக்கு வெளியே அரச நிறுவனங்களை நிறுவுவதிலும், கட்டிடங்கள், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளைக் நிர்மாணிப்பதிலும், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக நிலத்தை முழுமையாகப் பயன்படுத்துவதிலும் அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இது தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒரு வீசேட பொறுப்பு உள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் புதிய நிர்மாணப்பணிகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
காலி கோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்கரைப் பகுதியை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிராந்தியமாக அபிவிருத்தி செய்வது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
பொதுமக்கள் மிகவும் இலகுவாக சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், காலி நகரிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களையும் ஒரே நிர்வாகக் கட்டிடத்தின் கீழ் கொண்டு வருதல், தற்போதுள்ள நுண்கலைப் பாடசாலையை அபிவிருத்தி செய்தல் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.
