முறையற்ற கடவுச்சீட்டை பயன்படுத்தியதாக விதிக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்துக்கு எதிராக சஷி வீரவங்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தண்டனைத் தீர்ப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார்.
குறித்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட சஷி வீரவங்சவுக்கு, 2022ஆம் ஆண்டு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 2 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
அந்தத் தீர்ப்பிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதன்படி, இதுவரை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சஷி வீரவங்ச, இன்று (11) முதல் 2 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
