அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கிய உடன்படிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எனினும், ஈரான் தரப்பு இந்தத் திகதியை இன்னும் உறுதிப்படுத்தாததால்,ஒப்பந்தம் கையெழுத்தாகும் நேரம் குறித்துக் குழப்பம் நீடிக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாளான இன்று (14) இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தாகத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஆதரவாகப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், இரு நாடுகளும் சமாதான உடன்படிக்கைக்குச் சம்மதித்துள்ளதாகவும், இன்று மின்னணு முறையில் கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமாபாத் மேற்கொண்டு வருவதாகவும், இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஈரான் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
இது குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) கருத்துத் தெரிவிக்கையில், ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும்,ஆனால் அது அடுத்த சில நாட்களில் (Coming days) நடக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
