கொழும்பிலுள்ள ஒரு முன்னணி வங்கியின் சட்டப் பிரிவில் பணியாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர், இரத்மலானையில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இருந்து இறைச்சி மற்றும் பிற பொருட்களை அபகரித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 520 கிராம் கோழி இறைச்சி, 250 கிராம் ஆட்டு இறைச்சி, வறுத்த முந்திரி, ஒரு பல் துலக்கும் தூரிகை மற்றும் ரூ. 5,290 பெறுமதியான மதிய உணவுப் பொட்டலம் என்பன அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பொருட்கள் அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பொருட்கள் வாங்க வந்தது போல் அங்காடிக்குள் நுழைந்த குறித்த பெண், சில பொருட்களை இரகசியமாக தனது கைப்பையில் வைத்துக்கொண்டதாக அங்காடியின் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் அவர் குறுகிய நேரத்தில் அங்காடியை விட்டு வெளியேறவுள்ளதாக கடை நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார், அங்காடியை விட்டு வெளியேறிய பெண்ணை பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உதவியுடன் சோதனையிட்டபோது, கைப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சட்டத்தரணி கடந்த 17 ஆம் திகதியும் இதே அங்காடியில் இருந்து இதேபோன்ற முறையில் மீன் வகைகளை அபகரித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
