மக்கள் வங்கிக்கு செலுத்தப்பட வேண்டிய 1.42 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிலுவைக் கடனை மீட்டெடுப்பதற்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை ஏலத்தில் விற்பனை செய்யும் உரிமையை உறுதிப்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வரவேற்றுள்ளார்.
‘X’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றில், 2021 ஆம் ஆண்டு மக்கள் வங்கியில் நிலவிய 54 பில்லியன் ரூபா பெறுமதியான செயலற்ற கடன்கள் தொடர்பாக தாம் வெளிப்படுத்தியதாகவும், அரசியல் செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட கடனாளிகள் பல ஆண்டுகளாக தவறுதலாக இருந்த போதிலும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தயா குழுமம் மற்றும் தயா அப்பாரல் எக்ஸ்போர்ட் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளதாகவும், குறித்த நிறுவனங்கள் கடன் தவறுதலில் ஈடுபட்டிருந்ததுடன், பலமுறை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதும், ஏலங்களை ஒத்திவைக்க முயன்றதும், வங்கியின் கடன் மீட்பு நடவடிக்கையை எதிர்த்து சவால் விடுப்பதில் ஒரு வருடம் எட்டு மாதங்களுக்கும் மேலாக தாமதம் செய்திருந்ததும் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பொதுமக்களின் நிதியை மீட்டெடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட வரவேற்கத்தக்க நடவடிக்கை என தெரிவித்த அவர், இது ஒரு வழக்கு மட்டுமே என்றும், கோப் குழுவின் கண்டறிதல்களில் அடையாளம் காணப்பட்ட பல பெரிய கடனாளிகள் இன்னும் கணிசமான சொத்துகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், அவர்களது கடன்கள் அரச வங்கிகளின் கணக்குகளில் செயலற்ற கடன்களாகவே தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய அளவிலான கடனைச் செலுத்தத் தவறும் சாதாரண குடிமகனுக்கு எதிராக விரைவாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில், அதே அளவுகோல் செல்வாக்கும் வசதியும் கொண்ட கடனாளிகளுக்கும் பொருந்த வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
“பொதுமக்களின் பணம் மக்களுக்குச் சொந்தமானது. கடனை யார் பெற்றிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் பொறுப்புக்கூறல் மாறுபடக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
