கல்வித் துறையில் நிலவும் மனிதவள பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில், அதனை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள உபகுழு விரைவில் முழுமையான அறிக்கையொன்றைத் தயாரிக்க தீர்மானித்துள்ளது.
“வளமான நாடு – அழகிய வாழ்க்கை” என்ற தேசியக் கொள்கைத் திட்டத்தில் கல்வித் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக பல நாடாளுமன்ற உபகுழுக்களும் கல்வி அமைச்சின் நிபுணர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்றான கல்வித் துறையின் மனிதவள பற்றாக்குறையை ஆராயும் உபகுழு அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது.
உபகுழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான கௌசல்யா ஆரியரத்ன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மனிதவள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 60 அம்சங்களை உள்ளடக்கிய ஆரம்பகட்ட வரைவு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் விரிவான முழுமையான அறிக்கையை அவசரமாகத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
