களுபோவில போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய இருதய பரீசோதனை, சிகிச்சைக்கான ‘கெத் லேப்’பிரிவு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (30) பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
நாட்டின் சுகாதார சேவை கட்டமைப்பில் நோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை சேவைகளை வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்காக, அமைச்சரின் ஆலோசனையின் பேரில் முன்னெடுக்கப்படும் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் இப்பிரிவு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது.
நாளை மறுதினம் திறக்கப்படவுள்ள இத்தொகுதியில் கெத் லேப், டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி பிரிவு மற்றும் சிறுநீரகம், சிறுநீரக கற்களை நீக்குவதற்கான லித்தோட்ரிப்ஸி பிரிவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவன்தெனிய தெரிவித்துள்ளார்.
