வியட்நாமின் முன்னணி விமான சேவை நிறுவனமான வியட்நாம் ஏர்லைன்ஸ், ஹோ சி மின் நகரத்திற்கும் கொழும்புக்கும் இடையே புதிய நேரடி விமான சேவையை 2026 ஆகஸ்ட் 16 முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த புதிய சேவை வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பு, சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகப் பயணங்களை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2026 கோடைகால விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் கீழ் இரண்டு புதிய ஏர்பஸ் விமானங்கள் சேவையில் சேர்க்கப்படவுள்ளதுடன், புகெட் உட்பட பல சர்வதேச வழித்தடங்களிலும் சேவைகள் விரிவுபடுத்தப்படவுள்ளன.
இந்த புதிய விமான சேவை, இலங்கையின் வான்வழிப் போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இது இலங்கை தென்கிழக்கு ஆசிய விமான வலையமைப்பில் முக்கிய மையமாக உருவெடுத்து வருவதை காட்டுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த சேவை பெரும் பங்களிப்பு வழங்கும் என வியட்நாம் ஏர்லைன்ஸ் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளது.
