ரிதீமாலியத்த – குருவிதென்ன, தொட்டிலேயாய பகுதியில் அமைந்துள்ள லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தில் படகு சவாரி செய்துகொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் கண்டியின் கடூகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரும், பூஜாபிடிய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கண்டிப் பகுதியைச் சேர்ந்த 33 பேர் கொண்ட குழுவினர், ஞாயிற்று கிழமை(28) லொக்கல்லா ஓயா நீர்த்தேக்க காப்பகத்திற்குள் விவசாயப் பண்ணை என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த சுற்றுலாத்தலம் ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர்.
அங்கு பிறந்தநாள் விழா ஒன்றைக் கொண்டாடிய பின்னர், குறித்த சுற்றுலாத்தலத்திற்குச் சொந்தமான இரண்டு சிறிய படகுகளைப் பாதுகாப்பற்ற முறையில் ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்ட மிதவைப்படகு மூலம், லொக்கல்லா ஓயா நீர்த்தேக்கத்தின் நடுவில் உள்ள சிறிய தீவொன்றிற்கு நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.
அங்கு நீராடிவிட்டு மீண்டும் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, படகுகளை இணைத்திருந்த மிதவை உடைந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நேரிட்ட சமயத்தில் அந்த மிதவைப்படகில் மூன்று சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் பயணித்துள்ளனர்.
அவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய இருவர் உயிர்காப்பு அங்கிகளை அணிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸாரும் பிரதேச வாசிகளும் இணைந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், நேற்று (29) காலை இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மகிந்தலை பதில் நீதவான் எஸ். கோவின்ன நேற்று (29) நண்பகல் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வருகை தந்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார். சம்பவம் தொடர்பில் ரிதீமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
