எதிர்காலத்தில் கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் இலங்கையின் தூதரகம் ஒன்றை திறப்பதற்கான எதிர்பார்ப்பு காணப்படுவதுடன், அதன் மூலம் மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள மேலும் சில நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேண வாய்ப்புகள் ஏற்படும் என்று சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவை சுற்றுலா மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (01) சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் துறைமுகங்கள் சிவில் விமான சேவை மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் இலங்கைக்கான கசகஸ்தான் தூதுவர் செர்ஜி விக்டோரோவ் ஆகியோருடன் அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீசன் உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் அநுர கருணாதிலக,
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் முதன்முதலாக கசகஸ்தான் தூதரகம் ஆரம்பிக்கப்பட்டமையை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி இராஜதந்திர உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் கசகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் இலங்கை தூதரகம் ஒன்றை திறப்பதற்கான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதன் மூலம் மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள மேலும் சில நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை பேண வாய்ப்புகள் ஏற்படும்.
அத்துடன், கடந்த ஆண்டில் கசகஸ்தானிலிருந்து 11,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதற்கமைய, தற்போது கசகஸ்தான் அரசாங்கத்தின் தேசிய விமானச் சேவையான எயர் அஸ்தானா டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான சுற்றுலாப் பருவ காலத்தில் மட்டுமே இலங்கைக்கு விமானப் பயணங்களை மேற்கொள்கிறது.
இதனை வருடம் முழுவதும் தடையின்றி இயக்குவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள முடியும். இது குறித்து உத்தியோகப்பூர்வ கோரிக்கை கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட தயாராக இருக்கின்றேன்.
மேலும், கசகஸ்தான் இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்த போதிலும், தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகள் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. இதனால் தனியார் துறையினரின் பங்களிப்புடன் வரத்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும். அத்துடன் கசகஸ்தானின் முக்கிய ஏற்றுமதி பொருட்களான எரிவாயு மற்றும் கனிம வளங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதால் அது குறித்தும் கலந்துரையாட வேண்டும் என்றார்.
