இலங்கைத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவை பிரதிநிதிகள் குழு, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை இன்று (03) சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல மனுவையும் முதலமைச்சரிடம் கையளித்தது.
இந்தச் சந்திப்பில், இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் மனித உரிமைச் சவால்கள், தமிழ்த் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி (Federal) அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மற்றும் இலங்கைத் தமிழ் மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணுதல், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இந்த பிரதிநிதிகள் குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் கே.வி. தவாராசா, TNPF தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், உத்தியோகபூர்வ பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் மற்றும் கொள்கைச் செயலாளர் நடராஜா கண்டீபன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இந்தச் சந்திப்பு சென்னை தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
