ஹல்துமுல்லை பகுதியில் அமைந்துள்ள பிரபல சூப்பர்மார்க்கெட் நெட்வொர்க்கின் கிளை ஒன்றில், காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, குறித்த வர்த்தக நிலையத்தில் காலாவதியான பிஸ்கட், சொக்லேட் மற்றும் முந்திரிப் பருப்பு ஆகியன விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்ட விதிகளின் கீழ் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இன்று புதன்கிழமை (08) இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதித் தரப்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தது.
