உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (PTA) கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றினால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டது.
சஹ்ரான் ஹாஷிம் இஸ்லாமிய அரசொன்றை (Islamic State) உருவாக்குவதற்கான தனது திட்டத்தை 2018ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்தியிருந்தமை ஜனக் டி சில்வா ஆணைக்குழுவின் முன்னிலையில் அம்பலமாகியிருந்ததாக சுரேஷ் சாலே சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இன மோதலை ஏற்படுத்தும் நோக்கில், கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அஸல பெரஹரா மீது தாக்குதல் நடத்த சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
2019 ஜனவரி 25 முதல் ஏப்ரல் 20 வரையான காலப்பகுதியில் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவிருந்த தீவிரவாத நடவடிக்கைகள் குறித்து, அன்றைய அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவினால் அப்போதைய பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மனு மீதான மேலதிக பரிசீலனைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
