அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாடுகளும் ஒத்துழைக்காத நிலையில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று திங்கட்கிழமை ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைச் சந்தித்து ஆதரவு கோரவுள்ளார்.
“மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஈரானின் நலன்களைப் பாதுகாக்கவும் இந்தச் சந்திப்பு அமையும்” என ரஷ்யாவிற்கான ஈரானிய தூதுவர் காசிம் ஜலாலி தெரிவித்துள்ளார்.
“அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலோ அல்லது கடல் வழித் தடைகளுக்கு பயந்தோ ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராது” என ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் மூடியுள்ளதால், மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இது உலகளாவிய பணவீக்கத்திற்கும், பொருளாதார மந்தநிலைக்கும் வழிவகுத்துள்ளது. அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தள்ளிவைத்துவிட்டு, இந்த நீரிணையைத் திறப்பது தொடர்பில் ஈரான் புதிய முன்மொழிவை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போர் நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியிலும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நேற்று 14 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் ஜனாதிபதியின் செல்வாக்கு சரிந்து வருவதால், இந்தப் போரை விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரான் தனது அணுசக்தி கனவைக் கைவிடுமா அல்லது ரஷ்யாவின் உதவியுடன் போரைத் தொடருமா என்பது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
