“வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி முறைகேடுகளை அரசு குறைத்து மதிப்பிட முயல்கின்றது. ஆனால், ஒப்பந்தக்காரர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட தொகையில் 51 மில்லியன் ரூபா இன்னும் கணக்கில் காட்டப்படாமல் மாயமாகவே உள்ளது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இரட்டை கொடுப்பனவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் “அடிப்படையற்றவை” என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன அண்மையில் தெரிவித்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் இந்தப் பதிவை இட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக ஒப்பந்தகாரர்களுக்கு 263 மில்லியன் ரூபாய் தவறுதலாக அனுப்பப்பட்டதை, இலங்கை வங்கியின் நிதித் திரும்பப் பெறும் அறிவித்தல் மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகின்றது.
இவ்வாறு தவறுதலாகக் கைமாறிய தொகையில், 51 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை இதுவரை மீளப் பெறப்படவோ அல்லது கணக்கில் காட்டப்படவோ இல்லை.
உத்தியோகபூர்வ ஆவணங்களே உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டும் போது, எந்த அடிப்படையில் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதனை மறுக்கின்றார்.?” என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த விவகாரத்தில் அமைதி காப்பதையும், அரசின் மறுப்பு அறிக்கைகளையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த காலங்களில் சர்ச்சை ஏற்படுத்திய “திறைசேரி மின்னஞ்சல் மோசடி” போன்ற விவகாரங்களுடன் இதனைத் தொடர்புபடுத்திய நாமல் ராஜபக்ஷ, அரசு உண்மைகளை மறைக்க முற்படாமல், நடந்த தவறுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
