இலங்கையில் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியங்களை வழங்கும் முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய QR குறியீடு முறையானது, உர விநியோகத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த QR முறையின் ஊடாக விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றிற்கு 2,000 ரூபா நிதி மானியம் நேரடியாக வழங்கப்படுகிறது.
கடந்த 2024/2025 முழு ஆண்டிலும் 84,472 விவசாயிகள் மாத்திரமே மானிய உரத்தைப் பெற்றிருந்தனர். ஆனால், புதிய QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 187,759 விவசாயிகள் உரத்தைப் பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 122.3 வீத வளர்ச்சியாகும்.
மார்ச் மாத இறுதியில் 21,117 மெட்ரிக் டொன் உர விநியோகம் நிறைவடைந்துள்ளன. இது முந்தைய காலப்பகுதியை விட 62.2 வீதம் அதிகமாகும்.
பழைய முறைமையில் உர விநியோகத்தின் போது இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் தாமதங்களை இந்த கியூ.ஆர். தொழில்நுட்பம் முற்றாகத் தவிர்த்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள உண்மையான விவசாயிகளுக்கு எவ்விதத் தடையுமின்றி உர மானியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை 334,256 (50 கிலோ கிராம்) உர மூடைகளும், 176,199 (25 கிலோ கிராம்) உர மூடைகளும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
