வியட்நாம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்றும் (07) நாளையும் (08) விசேட போக்குவரத்து திட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
விசேட பிரமுகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிமித்தம், குறிப்பிட்ட நேரங்களில் சில பிரதான வீதிகள் மூடப்படலாம் அல்லது போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று இரவு (07)) வியட்நாம் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு நகருக்கு வருகை தரும் போது, அவர்கள் பயணிக்கும் பாதையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்.
நாளை (08) ஜனாதிபதி செயலகம், கொழும்பு பொது நூலகம், பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகிய இடங்களுக்குச் செல்லும் உத்தியோகபூர்வ பயணங்களின் போது காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஜனாதிபதியின் வாகனப் பேரணி செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே, அந்தப் பாதைகளில் கனரக வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்படும்.
வாகனப் பேரணி கடந்து செல்லும் குறிப்பிட்ட நேரங்களில் ஏனைய வாகனங்களின் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டு, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் வகையில், பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
