லாஃப் மஞ்சள் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் திங்கட்கிழமை (11) லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் வர்த்தக அமைச்சரால் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் லாஃப் நிறுவனம் தன்னிச்சையாக செயற்படுகிறது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதியளவு எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத நிலையில் விலையை மட்டும் உயர்த்துவதில் பயனில்லை. சந்தையில் நீல நிற சிலிண்டர்கள் போதியளவு காணப்படுவதனால் நுகர்வோர் தன்னிடமுள்ள வெற்றுச் சிலிண்டர்களை நிறுவனத்திடமே ஒப்படைத்து விட்டு தற்போதைய சந்தை விலைக்குரிய பணத்தை பெற்றக்கொள்ள வேண்டும்.
இவற்றுக்கெல்லாம் இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவில் அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரியளவில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், செவ்வாய்க்கிழமை வர்த்தக அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தை முன்னேடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
