மாத்தறை மாவட்டத்தின் தெனியாய கல்வி வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுவர்களிடையே மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய் நிலைமை வேகமாகப் பரவி வருகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாடசாலை மாணவர்களிடையே இந்த வைரஸ் தொற்று தீவிரமாக அவதானிக்கப்பட்ட போதிலும், தற்போது சுகாதாரப் பிரிவினரின் முறையான தலையீட்டினால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெனியாய மற்றும் கொட்டபொல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ள இந்தக் காய்ச்சலானது ஒரு வகை வைரஸ் தொற்றினால் ஏற்படும் ‘மெனின்ஜைடிஸ்’ நிலைமை என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சுமார் 47 முதல் 50 வரையான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக 14 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே இது மிக வேகமாகப் பரவியுள்ளது.
இந்தத் தொற்று பரவ ஆரம்பித்தவுடன், நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. இதன் மூலம் இது பாக்டீரியாவினால் ஏற்படும் தீவிர மெனிஞ்சைடிஸ் அல்ல என்பதும், இது ‘வைரல் மெனிஞ்சைடிஸ்’ என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இது உயிராபத்து விளைவிக்கக்கூடியது இல்லை என்றாலும், விரைவான பரவல் தன்மை கொண்டது. தெனியாய பகுதி ஒரு மலைப்பாங்கான பிரதேசம் என்பதால், பல பாடசாலைகள் மற்றும் வீடுகள் இயற்கை நீரூற்றுகள் அல்லது சிறிய கிணறுகள் மூலமே நீரைப் பெற்றுக்கொள்கின்றன. சிங்ஹராஜ வனப்பகுதியை ஒட்டியுள்ள போதிலும், கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக தரைக்கீழ் நீர் அல்லது நீரூற்றுகள் அசுத்தமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, நீரை குறைந்தது 10-15 நிமிடங்கள் கொதிக்க வைப்பது மாத்திரமே இந்த வைரஸை அழிக்கும் ஒரே வழி என பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸானது அசுத்தமான நீர் அல்லது உணவு மூலமே பிரதானமாகப் பரவுகின்றது என்பதுடன், சுவாசத் தொகுதி ஊடாகவும், நெருக்கமான தொடர்புகள் மூலமும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. கடும் காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, கழுத்துப் பகுதியில் ஏற்படும் இறுக்கம் அல்லது வலி, வாந்தி, உடல் வலி மற்றும் உணவருந்தாமை போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். அத்துடன், வெளிச்சத்தைப் பார்க்கும்போது கண்களில் ஏற்படும் வலி அல்லது கூச்சம் போன்ற நிலைகளும் நோயாளர்களிடையே காணப்பட்டுள்ளன.
உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளும் போது 6 முதல் 7 நாட்களில் இந்நோய் முழுமையாகக் குணமடைகின்றது. அந்தவவகையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாணவர்களிடையே நோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தெனியாய கல்வி வலயத்திற்கு உட்பட்ட நான்கு பிரதான பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. தெனியாய தேசிய பாடசாலை, ராஜபக்ச மகா வித்தியாலயம், புனித மத்தேயு மகா வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்பட்டன.
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர், தென் மாகாண கல்விச் செயலாளர் நிஷான் பத்திரனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பாடசாலைச் சூழலில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு முழுமையாகத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தநோய் நிலைமை தொடர்பில் கருத்துத்தெரிவித்த சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல்பிரிவின் விசேட வைத்திய நிபுணர்பாலித கருணாபேம, தற்போது நோய் பரவல்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், புதிய நோயாளர்களின் எண்ணிக்கையில்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பொதுமக்கள் அசுத்தமான நீரைப் பருகுவதைத் தவிர்த்து,கொதித்தாறிய நீரை மாத்திரம் பருகுமாறும்,உணவுகளைச் சுத்தமான முறையில் உட்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.
