நிலவும் தீவிர டெங்கு பரவல் அபாயத்தை முன்னிட்டு, மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குட்பட்ட சுமார் 300 வீடுகளும் அரச நிறுவனங்களும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, டெங்கு நுளம்பு பெருக ஏதுவான சூழலை பராமரித்ததாகக் கண்டறியப்பட்ட 19 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நுளம்பு இனப்பெருக்கம் ஏற்படக்கூடிய அசுத்தமான சூழலைக் கொண்டிருந்த 30 வீடுகள் மற்றும் வளாகங்களுக்கு இறுதி சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துரலிய மற்றும் திப்பத்துவாவ நகரங்களைச் சூழவுள்ள அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் கணிசமான அளவில் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அக்குரஸ்ஸ மற்றும் அத்துரலிய நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
