இலங்கையின் புதிய சரக்கு போக்குவரத்து விமான சேவையான ‘WEAIR’, தனது வணிக நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
லக்சம்பேர்க்கை தளமாகக் கொண்ட ‘IOTC இன்வெஸ்ட்மென்ட்’ (IOTC Investment) நிறுவனத்தின் நிதி மற்றும் மூலோபாய முதலீட்டுடன் இந்த புதிய விமான சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், உலகளாவிய ரீதியில் நிச்சயமற்ற தன்மைகள் நிலவியபோதிலும், இந்த முதலீடானது இலங்கையின் பொருளாதார சாத்தியக்கூறுகள், மூலோபாய இருப்பிடம் மற்றும் தொழில்முனைவோர் திறன்கள் மீது சர்வதேசத்திற்கு உள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.
இலங்கை வரலாற்று ரீதியாக சர்வதேச வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ள போதிலும், சரக்கு போக்குவரத்திற்காக வெளிநாட்டு நிறுவனங்களிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்நிலை மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நவீன உலகச் சந்தையில் வேகம், நம்பகத்தன்மை மற்றும் இணைப்புத்திறன் ஆகியவை பொருளாதார வெற்றிக்கு மிக முக்கியமானவை என்றும், இந்த புதிய விமான சேவை ஏற்றுமதி, மின்-வணிகம் (e-commerce) மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட துறைகளின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
‘WEAIR’ விமான சேவை, ஆரம்பத்தில் போயிங் 737-800 (Boeing 737-800) ரக சரக்கு விமானத்துடன் தனது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதுடன், எதிர்காலத்தில் தனது விமானங்களின் எண்ணிக்கையையும் கொள்ளளவையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த விமான சேவை கொழும்பை, தெற்காசியா, தென்மேற்காசியா, தென்கிழக்காசியா, இந்தியப் பெருங்கடல் பிராந்தியம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகிய முக்கிய இலக்குகளுடன் இணைக்கவுள்ளது.
கொழும்பை ஒரு முக்கிய தளவாட மையமாக (Logistics Hub) மாற்றுவதற்கும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான நம்பகமான நுழைவாயிலாக நிலைநிறுத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள பரந்த பார்வைக்கு இந்த முயற்சி பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
