2026 பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய கூட்டு இராணுவ நடவடிக்கை, தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் மூலம் இன்று ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் இரு தரப்பினரும் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்தில் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர் என பாக்கிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். மேலும் இந்த ஒப்பந்தம் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் எனவும் உலகளாவிய வர்த்தகத்தைப் பாதுகாக்கும் என இந்தியா நம்புவதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
“உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தி, பல நாடுகளில் உயிர் இழப்புகளுக்கும் வழிவகுத்த மேற்கு ஆசிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வை வரவேற்கிறேன்.
இந்தப் புரிந்துணர்வைச் செயல்படுத்துவது, பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கவும், கப்பல் மற்றும் வர்த்தக சுதந்திரத்தை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகிறது.
எஞ்சியிருக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசித்து ஒரு நீடித்த இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
