உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை கத்தோலிக்க திருச்சபை வன்மையாக மறுத்துள்ளதுடன், இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என சுட்டிக்காட்டியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை சீர்குலைப்பதற்காகவே ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். இவ்வாறான போலியான விடயங்கள் மீது நம்பிக்கை கொள்ளவோ அல்லது பகிரவோ வேண்டாம் என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே தற்போது சமூக வலைத்தளங்களில் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் 2020 செப்டம்பர் 19ஆம் திகதி கொழும்பு மறைமாவட்டத்தின் மூன்று உதவி ஆயர்களினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை ஊடாக இந்த குற்றச்சாட்டு மறுக்கப்பட்டு, அதற்கான காரணிகளும் வெளிப்படுத்தப்பட்டன.
இத்தாக்குதல்கள் குறித்து பேராயருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்துள்ளது என்று மீண்டும் மீண்டும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் உண்மைத் தன்மையற்றவை, முற்றிலும் தவறானவை.
இத்தாக்குதல்கள் குறித்த முன்கூட்டிய தகவல்கள் பாதுகாப்புப் பிரிவினருக்குக் கிடைத்திருந்தன என்றும், அவை போராயருக்கு தெரிவிக்கப்பட்டன என்றும் கூறப்படும் ஏனைய கருத்துக்களையும் நிராகரிக்கத்தக்கவை. இத்தகைய கூற்றுகள் முற்றிலும் பொய்யானவை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை சீர்குலைக்கும் நோக்கிலேயே இவ்வாறான குற்றச்சாட்டுகள் திட்டமிடப்பட்ட வகையில் முன்வைக்கப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் பரிமாற்றப்படும் சரிபார்க்கப்படாத இத்தகைய தகவல்களை நம்பவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ வேண்டாம் என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
