தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகில் கார் ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த பெண், தனது காதலன் எனக் கூறப்படும் நபருடன் நுவரெலியா பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கியிருந்ததாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த நபர் பெண்ணின் சடலத்தை சம்பவம் நடைபெற்ற இரவே காரில் ஏற்றி, மறுநாள் காலை தெல்தெனிய பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரும் தங்கியிருந்த விடுதியின் சிசிடிவி காட்சிகள் தற்போது விசாரணைக்காக பெறப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில், பெண்ணை அறையிலிருந்து தூக்கிச் சென்று காரில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் நுவரெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில், நுவரெலியா தடயவியல் காவல்துறையினரின் உதவியுடன் விடுதியில் காணப்பட்ட தடயங்கள், சிசிடிவி பதிவுகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை சேகரித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
