இலங்கை சுங்கத் திணைக்களம், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1,373.7 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிடத்தக்க அளவில் விஞ்சியுள்ளது.
சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க சிரேஷ்ட பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்ததாவது, ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டின் முதல் பாதிக்காக 1,060.5 பில்லியன் ரூபா வருமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை விட 313 பில்லியன் ரூபா அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கூறினார்.
2026 ஆம் ஆண்டிற்கான சுங்கத் திணைக்களத்தின் மொத்த வருமான இலக்கு 2,206 பில்லியன் ரூபா ஆகும். அதேவேளை, 2025 ஆம் ஆண்டில் 2.5 டிரில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டு வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டிருந்தது.
ஜூலை மாதத்திற்கான வருமான இலக்கு 192.4 பில்லியன் ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாதத்தின் முதல் இரண்டு நாட்களிலேயே 31 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய வருமானப் போக்கின் அடிப்படையில், கடந்த ஆண்டு எட்டப்பட்ட 2.5 டிரில்லியன் ரூபா வரலாற்றுச் சாதனையை இந்த ஆண்டில் முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
எனினும், மோட்டார் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தொடர்வதால், வாகன இறக்குமதி தொடர்பான வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
