கடந்த ஜனவரி மாதம் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் 11 வயது சிறுவன் ஒருவன் குற்றவாளியாக இணைக்கப்பட்டதை அடுத்து, அந்த சிறுவன் உடனான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
கராச்சியின் எம்.எ.ஜின்னா சாலையில் உள்ள வர்த்தகப் பகுதியான சத்தாரில் அமைந்துள்ள குல் பிளாசா வணிக கட்டிடத்தில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த வணிக வளாகம் முழுவதும் சேதமடைந்தது.
அதனைத் தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வசித்த சிறுவனும் அவனது தந்தையும் தீ விபத்து ஏற்பட்டதிலிருந்து தலைமறைவாகிய நிலையில், அவர்கள் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளனர், அத்துடன் மேலும் 4 பேர் இந்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவன் தனது தந்தை இல்லாத நேரத்தில் தீக்குச்சிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தீயை மூட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்களுடன் அந்த சிறுவனும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்ற பத்திரிக்கையில் 42 அரசு தரப்பு சாட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தீ விபத்தில் 72 பேர் உயிர் இழந்தனர். எட்டு பேர் காயமடைந்த நிலையில் 1153 கடைகள் முழுதாக தீக்கிரையாகின.
இன்னிலையில் அரசு தரப்பு சாட்சிகள் பலர் தங்களது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். சாட்சியங்களில் ஒருவரான 13 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பனின் கடையில் குறித்த சிறுவன் இருந்தபோது தீக்குச்சிகளால் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென கடை தீப்பற்றியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்
